Thursday 1 September 2016

#ஒரு மயிலிறகால் 30.08.16 #17

#ஒரு மயிலிறகால்
30.08.16

விண்வீதி யலைந்ததொரு கார்மேகம்
மண்மீதில் மகிழ்ந்ததொரு மயூரம்
சொட்டென்று ஓர்துளி கீழ்நீளப்
பட்டென்று விரிந்த வண்ணத் தோகைக்
கட்டொன்று பார்வைதனைக் கட்டிவிடச்
சிட்டென்று பறந்திட்ட மனமதுவும்
சட்டென்று நிறம் மாறிக் குதூகலமாய்
விட்டதுவே மனக் குமுறலதை......

கையருகில் கிடைத்ததொரு மென்சிறகு
மையலாய் மயக்கிட்ட ஒரு மயிலிறகு
கன்னத்தை வருடிய ஓர் அழகு
கண்ணனவன் முடி கொண்ட பேரழகு.....

ஆயிரமாயிரம் ஆரணங்கள் காத்திருக்க
ஆநிரை கொண்டோன் கண்களில்
ஆரணங்குகள் மயங்க கற்றைக் குழல்
ஆரமாய்க் குடி கொண்ட இறகு.....

வீசும் இளம் தென்றலில் வேல்
விழி புணர்ந்ததொரு பொழுதிலும்
மாசு இல்லாப் பிள்ளை மேனி
விரல் வருடும் போதிலும்
மயிலிறகால் தொடுகின்ற உவமை
மாற்றமுண்டோ என் கருத்தில் உண்மை
மயிலிறகின் மென்மை கண்ட பெருமை.

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment