Monday 19 September 2016

கடவுளுக்குமா ??? #32

ஆற்றங்கரையில் அரசமர நிழலில்
ஏகாந்தத்தில் வீற்றிருந்த என்னை
நகர நடைபாதையினில் வைத்தே
வணிகப் பொருளாய் விற்றிட்டார்

போட்டியிட்டு எனை வாங்கிப்
பாங்குறவே பந்தலிட்டுப்
பளபளவெனவே அலங்கரித்துப்
பத்து நாட்கள் அமர்த்தி வைத்தார் 

இருந்த ஒரு முகம் போனதனால்
ஆனை முகமான என்னைப்
பல வேறு முகங்கள் கொண்ட
அவதாரமெனச் சித்தரித்தார். 

பேட்டைக்குப் பெரிய ஒன்று
தெருவிற்கு ஏத்த ஒன்று தம்
வீட்டிற்குத் தனி அடுக்குமாடிக்
குடியிருப்பில் ஒரு பொதுவென்றே

எத்தனை இருப்பிடங்கள்
என்னென்ன அலங்காரங்கள் 
குறையாத கூட்டங்கள் பல
கோடிப் பிரார்த்தனைகள்

காணிக்கைகள் கொண்டு
குவிக்கும் கூட்டங்கள்
கணக்கெடுத்தால் கைசோரும்
மனம்சோரா மாந்தர்கள்

பத்தாம் நாள் அலங்கரித்துத்
தேரினையொத்த வண்டியதில்
மின்விளக்கு ஜொலிஜொலிக்க
வீதியெங்கும் தோரணமிட்டு

ஆண் பெண் பேதமின்றி
ஆடியேதான் ஊர்வலம் செல்ல
பாட்டுக்கள் வகை வகையாய்க்
காதினிலே ஓலமிட

ஷீலாவின் இளமையும்
முன்னியின் பெயர் கெட்டதுவும்
பீடியின் நெருப்பைத் தன் 
நெஞ்சினிலே சுமந்திட்ட

பாவையவள் பரிதவிப்பைக்
கேட்டே நானும் கசிந்துருகிக்
கண்கலங்கிச் சோர்வுற்றுத்
தவிக்கையிலே கண்ணீரோடு

எனையிறக்கி எதிர்பாராக்
கணத்தினிலே கடலினிலே
தள்ளியெனைத் தலைமுழுக
வைத்து அவர் ஒதுங்கிட்டார்

முழுதும் கரையாமல்
உடலின் பாகங்கள்
கரையொதுங்கித் தவிக்கையிலே 
காணாமல் அவர் சென்றிட்டார்

மண்ணால் பிடித்தது
மண்ணுள்ளே சென்றதென
முன்னோர்கள் சொன்னதை
மறந்தேதான் நடந்திட்டார்

பொன்னான பூமியும்
பால் போன்ற அலை கடலும்
மாசுறவே செய்திட்டார் விளையும் 
தீங்கதனை மறந்திட்டார்

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment