#ஆசைகளின் படியில்
ஆசைகளின் படியில் ஆடாத மனது
தேசங்கள் தேடினும் காணீர்
அறிந்ததை உரைப்பேன் கேளீர்
மாற்றுரைத்தால் கேட்பேன் வாரீர்
ஆசையே அழிவிற்குக் காரணம்
புத்தனின் வாக்கு ஒன்று
சித்தார்த்தனின் தேடல் ஆசை
புத்தனாய் நமக்கு இன்று
அரையாடை உடுத்தி நின்ற
காந்தியின் எளிய உள்ளம்
குறையாமல் கொண்ட ஆசை
கண்டதே நம் சுதந்திரம்
அன்பின் பெருவடிவம் உண்மையில்
அன்னையோ சிறு உருவம்
மனித சேவையே தன் ஆசையென்று
சொன்ன தாயுள்ளம் தெரசாவன்றோ
விண்கண்ட வெள்ளை உள்ளம்
விஞ்ஞானி ஆன ஞானி
கலாமும் கொண்ட ஆசை
கனவைத் துரத்தும் இளைய சமூகம்
ராஜராஜனின் கோவில் ஆசை
தஞ்சையிலே உயர்ந்து நிற்க
ஷாஜகானின் ஆசை உறவோ
தாஜ்மஹாலாய் உருவெடுக்க
காவி உடை வசதிக்கில்லை
வாழ்வின் முறையே அதுதானென்று
உண்மை ஞானம் தேடிய முனியின் ஆசை
உணர்ந்ததை ஊருக்கு உரைத்தல்
நல்லவர் கொண்ட ஆசை
நன்மையே பயக்கும் என்போம்
தயக்கமின்றி ஆசை கொள்வோம்
படிகள் ஏறி உயரம் செல்வோம்
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
#ஆசைகளின் படியில்
நாள் 16.08.16
கனவுகள் என்னும் வடத்தினிலே
அனுதினம் எந்தன் மனத்தினிலே
ஆசைகள் எனும் முத்துக்கள்
அழகழகாகக் கோர்த்து வைத்தேன்
காற்றினில் மாறும் மேகங்களாய்க்
கண்ணெதிர் தோன்றி மறையுமுன்னே
கைகளால் பற்றிக் கருத்தினில் பொதித்து
காதலென அதைப் போற்றி வைத்தேன்
இன்னிசையாய் வரும் கீதம் கேட்டால்
இசைக்குயிலாக நான் மாறிட ஆசை
வீணையில் நாதம் விளைந்திட வைக்கும்
விரல்களாகவும் ஆகிட ஆசை
'ததிங்கினத்தோம்' சொல்லக் கேட்டால்
தந்தேன் எனையென ஆடிட ஆசை
நாட்டியத் தாரகை நீதான் என்றே
நாநிலத்தில் பலர் புகழ்ந்திட ஆசை
கற்பதைத் தவிர வேறொரு வேலை
காணாமல் நான் வாழ்ந்திட ஆசை
கற்பிப்பதிலும் எனைப் போல் ஒருவர்
கண்டதுண்டோ எனக் கேட்டிட ஆசை
உயிரைக் காக்கும் மருத்துவராகி
உயர்ந்த செயல்கள் செய்திட ஆசை
கற்றுத் தெளிந்த அறிஞரும் ஆகி
காவியங்கள் பல படைத்திட ஆசை
அன்பைத் தந்து அடைக்கலம் கொண்டு
அன்பே உருவென மாறிட ஆசை
உள்ளும் புறமும் மாற்றம் இல்லா
உயிராய் என்றும் நிலைத்திட ஆசை
எத்தனை பிறவி எடுத்தால் எந்தன்
இத்தனை ஆசைகள் தீரும் இறைவா
கணக்கெடுத்தாலோ கைதான் ஓயும்
மனம் ஓயாமல் நீ காத்திட வேணும்.
கவியாக்கம் - ரத்னா வெங்கட்