#அம்மா வரம் வேண்டும்
19.09.16
ஐயிரு திங்கள் சுமந்தே உந்தன்
ஐம்பொன் மேனிதவித் திடப்
பாசமெனும் கொடிவழி காத்துப்
பெரும் பேறெனவே எனை ஈந்தாயே....
தாயே அன்னைக்குக் கடன்பட் டோமென
மாந்தர்கள் பலருரைக்க இல்லையென
மறுத்துரைப்பேன் கடனதுவோ உந்தன் அன்பு
வற்றாத பெருங்கருணைக் கடலன்றோ.....
கடலே அலைகளில் தாலாட்டியெனைக்
கரை சேர்த்தாயே என்விழி வழியே
உலகு கண்டாயே உணராமல் உள்ளிழுக்க
உயிராகும் காற்றெனவே (நீ)நிறைந்தாயே....
நிறைந்திட்ட அன்பில் திளைத்திட்ட
பின்னும் நான் தீராத பேராசையினால்
கேளாமலே கொடுக்கும் உன்னைக்
கேட்டுப் பெறவும் வந்திட்டேன்.....
வந்தேன் கோரிக்கை கொண்டு
வள்ளலாய் வாரியே (நீ)வழங்கிய
பாசமதை எந்தாளும் அழியாமல்
பெற்றது போல் கொடுத்திடவே...
இடுவாய் எனக்கோர் வாய்ப்பு
இனிவரும் பிறவிகளெல்லாம்
என்மகவாய்ப் பிறந்திடுவா யெனும்
வரமது வேண்டும் தருவாயா அம்மா? ....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment