#48 வார்த்தைகள்
25.09.16
நட்டு வச்ச தென்னங்கன்னு
நான் வளர்த்த எந்தன் கண்ணு
தண்ணியத்தான் குடிச்சுப்புட்டுத்
தலையால காயைத் தந்து
தவறாம என்னைக் காக்க
நான் பெத்த பிள்ளை ஒன்று
நம்பிக் கெட்ட எந்தன் மண்ணு
தண்ணியத்தான் அடிச்சுப்புட்டு
தவறிப்போயி தானும் கெட்டுத்
தனியா என்னைப் புலம்ப வைக்க
தீராத சோகமய்யா
தீரவில்லை பாரமய்யா
தன்னைக் காக்க நாதியில்லா
தள்ளாத வயதினிலே துணையாகப்
பேரனுந்தான் நம்பியிங்கு வந்தானய்யா
காலமிங்கே திரும்பு தய்யா...
வேர் குடித்த நீரை
ஏற்றியே தன் தலையில்
தனக்கெனவே வைக்காது
தவித்திடும் வேளையிலே பிறர்
தாகமது தீர்த்திடும் தென்னையும்
உடல் தளர்ந்து மூப்பினிலே
தள்ளாடும் பொழுதினிலே
தளிரொன்று அடைக்கலமோ
உறவென்ற பிணைப்பதுவோ
பாசத்தின் பெருவெளியில்
யாருக்கு யார் காவல்?