#உசுரு ஒட்டிக்கிட்டு இருக்குதே
#வெளுக்காம போகாது கிழக்கு
1.10.16
உசுரு ஒட்டிக்கிட்டு இருக்குதே
உவரு மண்ணைப் போல ஆச்சுதே
உள்நாக்கு மேலண்ணத்தில ஒட்ட
உதடும் காஞ்ச தரிசாச்சுதே
மழையப் பார்த்து விதை விதைச்சா
மானம் பொய்க்கும் விதியாச்சே -ஏழை
மானங் காக்கவும் மறந்தேதான்
மானமும் சதி செய்யும் கதையாச்சே.
வாங்கின கடனோ கொஞ்சந்தான்
வட்டிய நெனச்சா கலங்குது நெஞ்சந்தான்
பயிரோ வாடுது காஞ்சேதான் -வயிறு
பத்தியே எரியுது இங்கேதான்
கல்யாண வயசுல ஒரு பொண்ணு
தள்ளாத வயசுல என் ஆத்தா
தோள் சேர்ந்து ஏரோட்ட ஒரு புள்ள
தூணாட்டம் தாங்கிடும் பொண்டாட்டி
கண்ணாட்டம் எல்லோரும் துணையிருக்க
தள்ளாட்டம் கண்டாலும் எம்மனசு
தன்னுசுர மாச்சுக்க நினைக்காதய்யா
கண் திறப்பா மாரியாத்தா சத்தியமய்யா
உழவு ஒன்னேதான் பொழப்பு
வேறெதுவும் தேவையில்ல எமக்கு
வெளுக்காம போகாது கிழக்கு
கவியாக்கம் -ரத்னா வெங்கட்.
No comments:
Post a Comment