# விழிகள் உதிர்த்திடும் கிரந்த எழுத்துக்கள்
#பட்டு தெறிக்கட்டும் முத்துக்களாய்
15.09.16
விழிகள் உதிர்த்திடும் கிரந்த எழுத்துக்கள்
மொழியது புரிந்திடா மௌனப் பரிபாஷைகள்
இருளதில் துழவித் தேடிடும் பார்வையாய்த்
தவித்திடும் என்னுயிர் நீ சென்ற வழியினில்...
இமைதனைத் தாழ்த்தியென் விழி தவிர்க்கும்
வித்தையது கற்றதுவோ உயிர் குடித்திடவோ
தவிர்த்திட்ட விழியது விளைத்திட்ட வலியினை
உணர்ந்திட்டா சென்றாய் உன் வழியில் .....
விரல்கள் ஸ்பரிஸித்து வந்த நேசமில்லை
இதயம் துடிக்க வைக்கும் நீயென் ஸ்வாஸம்
வசந்தங்கள் கடந்தாலும் மாறாத பாசம்
வற்றாத கங்கையிது இல்லை வெளிவேஷம்....
வழக்கொழிந்த மொழியாயிடுமோ என் காதல்
தேய்ந்து அழிந்து வெறும் கல்வெட்டாயிடுமோ
வழக்கிலாவது உபயோகித்திடடி என் கண்ணே
வாழ்கிறேன் உன்வாக்கில் தமிழ்ப் பெண்ணே.
ஏறிட்டு ஒருமுறை பார்த்தே உன்
நேசக்கரம் நீட்டிடு என் கண்ணீர்
பட்டான உன் வளைக்கரத்தில்
பட்டுத் தெறிக்கட்டும் முத்துக்களாய் ....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment