#தாலாட்டும் தமிழ்
18.09.16
அகிலமும் அடங்கிடும் அன்னையின் அன்பினில்
அமுதமும் அல்லவா அவள்குரல் ஒலிக்கையில்
ஆதிநாள் ஆங்கவள் வாரியேதன் மடியிலிட்டு
ஆராரோ பாடித் தாலாட்டத் தமிழதனில்
இருசெவியும் தேனதில் இன்பமாய் நனைந்திட்டு
இன்னமும் மயக்குது இமைசோராமல் இயக்குது
ஈடுண்டோ அருந்தினால் மீளவும் வழியுண்டோ
ஈங்கவள் மோகத்தில் தீராத உயர்வன்றோ
உண்ணக் குறையாத சுவையும் அவளே
உயிர்க்கு மருந்தாகும் அவள்தன் வளமே
ஊனில் கலந்திட்டு உயிர்த்து மெய்யுருக்கியென்
சூலில் வளர்ந்திட்ட பூமகளும் இவளோ
எங்கும் நிறைந்தென் எண்ணமு மென்றாகி
எழிலாய் மயக்கிடும் என்காதலும் இவளோ
ஏமாற்றம் தவிர்த்து ஏற்றம் அளித்தே
ஏழ்மை துடைக்கும் மேலான செல்வமன்றோ
ஐந்தடக்கி வாழ வைக்கும் நற்றுணையோ
ஐயம் தீர்க்கும் பைந்தமிழே நம்துணையோ
ஒளிரும் வைரமே ஓவியமே எங்கள்
ஔவையின் மொழியே மௌத்திகமே தாலேலோ
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
மௌத்திகம்- முத்து.
No comments:
Post a Comment