#உயிராய் அவள்
அன்பின் வடிவே அருளது பூத்திடும் உருவே
அகப்பூச் சொரிந்து நின்அருட் பாதம் பணிந்தேனே
ஆக்கம் அளித்தே ஆத்ம ஞானம் தந்தாயே
ஆட்கொண்டே எம்மை ஆதரிப்பாய் என்றும் நீயே
இணையில்லா உந்தன் இளமை மாறா அழகும்
இசையாய் நாடகமாய் இயல்வடி வெனஎமை மயக்கிட
ஈர்த்து எம்மை ஈகை கொண்டு காத்தாயே
ஈண்டு உனக்கு ஈடிணை யுண்டோ தாயே
உத்தமி உந்தன் உயர்வு தனைச் சொல்லவே
உள்ளக்கிடக் கைகொண் டுவந்தே முயற்சித் தேனே
ஊக்கம் அளித்தே ஊற்றாக வாவெந்தன் வாக்கினிலே
ஊட்டுவாய் அமிழ்து ஊடுருவி எந்தன் பாட்டினிலே
எண்ணமும் மற்றும் எங்கணும் நிறைந்தே நின்றாய்
எண்ணியார் நின்னை எந்நாளும் நிறைவே பெற்றார்
ஏழுகடல் தாண்டினாலும் ஏற்றம் குறையாத ஏந்திழையே
ஏறுமுகம் தானுனக்கு ஏங்கிடவே இனித்தேவை யில்லையே
ஐந்தும் மணியாய் ஐம்பெருங் காப்பியம் ஆரணமாய்
ஐயேநின் எழிலும் ஐம்புலன் கொள்ளை கொண்டிடவே
ஒப்பித்தேன் என்னுயிர் ஒண்ணுதல் இனியும் இல்லையே
ஒத்துக்கொள் மகவென்று ஒப்பற்ற மொழியே தமிழேயென்
ஓவியமே உன்னழகை ஓதிடவே அனுதினம் நானும்
ஓடிவந் தேனேநீ ஓம்புதலும் வேண்டியே தாயே
ஔடதம் தேடா யௌவனம் வருமே உனைப்பருக
ஔவியம் கொள்வாரெம் சௌந்தரம் கண்டேபிற மொழியினரும்.
கவி முயற்சி- ரத்னா வெங்கட்
தமிழன்னையை 'எம் உயிராய் அவள் ' என்ற
தலைப்பில் பாட முயற்சி செய்துள்ளேன். முதல் முறை செய்துள்ள முயற்சி. பிழை இருந்தால் மன்னிக்கவும். வாய்ப்புக்கு நன்றி.
No comments:
Post a Comment