Monday 19 September 2016

#உண்மைச் சம்பவம் 14.09.16 #30

#உண்மைச் சம்பவம்
14.09.16

பாய்ந்தோடும் நதிகளைந்து
பெயரதின் காரணமாக
வளமான மண்ணதும்
வீரம் செறிந்த மக்களும்
பெற்ற ஒரு நகரினிலே
பெட்டையொன்று தான் ஈந்த
குட்டி ரெண்டு கிணற்றினிலே
தவறித்தான் விழுந்ததென்று
தவித்தேதான் போனதம்மா....

கதறியழ வாயில்லா ஜீவனது
குலைத்தேதான் தனை வளர்த்த
மனிதரையும் அழைத்திடவே
பதறியவர் ஓடிவந்து கிணற்றுள்
கண்டிட்ட காட்சியது ஈரக்
குலை நடுங்க வைத்ததுவே
பரிதவித்த குட்டிகளின் 
பக்கத்திலே படமெடுத்த
அரவொன்று சீறி நிற்க.....

பயமது தெளிந்தபின்
அறிவது வேலை செய்யக்
காட்சியில் கண்ட உண்மை
காணாத அதிசயமாய்ப்
பல்லதனில் விஷமுள்ள
பாம்பதுவும் குட்டிகளைக்
காத்தேதான் நின்றதுவே 
காப்பாற்றி மேலேற்றும்வரை
கண்டிட்டு நகர்ந்ததுவே.....

பாரத பூமியிலே பாம்புக்குமுள்ள
பண்பதனைத் தொலைத்தேதான்
மிருகமெனச் சிலர் உருமாறித்
திரிகின்றார் பாலருந்தும் பாலரோ
மழலை பேசும் குழந்தையோ
பள்ளி செல்லும் சிறுமியோ
பருவம் எட்டிப் பார்க்கும் கன்னியோ
எவரும் அவர் இலக்கு -இல்லை
அவர்க்கு விதிவிலக்கு......

பூக்களைக் கசக்கி முகர்ந்திடும்
குரூர மனம் படைத்திட்ட இவற்றை
விலங்குகளோடு ஒப்பிட்டால் அவை
வருந்தித் தலை குனியும்
திருத்திட முடியாத் தவற்றைப்
புரிந்திட்டோர் தமக்கு
இம்மையில் மறுமையில் ஏழேழ்
பிறவி எடுத்தே வந்தாலும் 
மன்னிப்பு என்பது கிடையாது.....

கவியாக்கம் -ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment