Saturday 24 September 2016

#பெண் #அகராதியில்# ஆண் 18.08.16 #38

#பெண் #அகராதியில்# ஆண்
18.08.16

முன்னொரு நாளில் இறைவனானவன்
இரண்டு தலையும் நான்கு கால்களும்
உணர்வும் உயிரும் ஒன்றெனக் கொண்ட
ஆண்பெண் அதனை ஒட்டியே படைத்து
தாள முடியாத் தருணத்தில் ஒருநாள்
தனியாய்ப் பிரித்தே அலைந்திட  விடுத்தான்
தன் இணை தேடி அலையும் உயிரே
ஆணும் பெண்ணும் என்றறிவோமே ....

இன்னுயிர் தந்தான் தந்தையானவன்
பெண்ணவள் வாழ்வில் முதல் ஆண்மகன்
இன்னும் சிலருக்கோ தாயும் ஆனவன்
அண்ணனும் அவனே தம்பியும் அவனே
அன்பின் வடிவாய் உருவெடுத்தானே
பாட்டனும் அவனே மாமனும் அவனே
பெரியப்பன் சித்தப்பன் எல்லாம் அவனே
பாசமும் பண்பும் கொடுத்தவன் அவனே....

எழுத்தறிவித்த நல்லாசிரியன் வாழ்வின்
ஏற்றம்  உரைத்த நல் குருவும் அவனே
தன்இட பாகம் என் அன்னைக்குத் தந்து
அம்மையப்பனான முதல்வனும் அவனே
காதலனாக என்னுள்ளம் கவர்ந்து
கணவனுமாகி நின்றவன் அவனே
என்னுள் உருவாகி என் உயிராகி
என் மகன் இவனென உயர்ந்தவன் அவனே...

இத்தனை உருவம் இத்தனை உயரம்
இவை மட்டுமே இவன் என்றாகி இருந்தால்
எத்தனை சிறப்பு எத்தனை மகிழ்வு
அவை முழுவதும் காணமுடியா ஓர்சோர்வு
தோழனாக நினைத்து நெருங்க
காலனாக மாறிடுவானோ அவன்
தனித்திருக்கும் பெண்ணைப் பார்த்தால்
தங்கை தாயை நினைத்திடுவானோ......

என் கருவானவன் வெளியேவந்து
என்னை அடக்க மனம் கொள்வானோ
தேவியின் வடிவம் என்றே புகழ்ந்து
தேய்பிறையாய் எனைச் செய்திடுவானோ
தேம்பும் உள்ளம் கேள்விகள் கேட்க
தன்மனம் திருத்தி உயர்த்திடுவானோ
பெண் என்பவள் தன்னில் ஓர் பாதி என்ற
பேருண்மையை உணர்ந்திடுவானோ.....


நம் பார்வையில் முழுமையான ஆண்
நாம் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை
என்ற நம்பிக்கையுடன்
கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment