#உள்ளத்தில் பூக்காத அன்பு
01.09.16
அதிசயமாய்ப் பூத்ததொரு அத்திப்பூ
ஆசைத் தளை பிணைத்த காப்பு
இசையெனவே வளர்ந்த வளர்ப்பு
ஈடில்லா உவப்பளிக்கும் முல்லைப்பூ.....
அன்னையின் அன்பு மல்லிகைப்பூ
தந்தையின் உள்ளமது மகிழம்பூ
அரவணைத்து ஏற்றி விட்ட கொழுகொம்பு
தள்ளாட்டம் கண்டவுடன் வேப்பம்பூ....
மணந்து பின் வாசம் விட்ட காகிதப்பூ
மாறி விட்ட பிள்ளை உள்ளம் கள்ளிப்பூ
மாற்றாளாய்ப் பார்க்க வைத்த வெறுப்பு
மரத்து விட்ட உள்ளத்தில் பூக்காத அன்பு....
பருவத்தில் பூத்திட்ட ரோஜாப்பூ
பார்வையிலே பேதமில்லா காதலின் பூ
குலம் பார்த்துக் கொள்ளா விருப்பு
குற்றமென ஆனது யார் பொறுப்பு.....
வாழத் துடித்த இதயங்களின் இணைப்பு
வாழ்த்த வகையறியா இனங்களின் காழ்ப்பு
மன்னித்து அறியா அரிவாள் கொய்த குருதிப்பூ
மதம் கொண்ட உள்ளத்தில்
மறந்தும் பூக்காது அன்பு...
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment