Monday 19 September 2016

# வேரைத்தேடி 13.09.16 #28

# வேரைத்தேடி
13.09.16

வேர்களைப் புதைத்து ஓரிடம்
நிலைத்து உயர்ந்திருக்கும்
மரங்களும் இடம் பெயர்தலுண்டு
விதை விழுங்கி மரம் சுமந்த பறவையால்.....

புதைந்த விதை துளிர்த்து மழை
முகில் நோக்கி வளரும் மறுபடியும் 
வேர் விட்டுக் கிளை பரப்பி
விழுதுகள் ஊன்றி அசையும்.....

வேர்களை விடுத்து சிறு
விதைகள் மேற்கொள்ளும்
தொலை தூரப் பயணங்கள் என்றும்
வலி தூரப் பயணங்களே.....

விதைகளின் மரபணுக்களில்
படிந்த வேர்களின் நினைவுகளே 
இடைவெளிகள் தாண்ட வைக்கும்
விடுகதைக்கு விடையளிக்கும்.....

வேர்களும் விதைகளும் போல
நம்மிலே பலரிங்கு உண்டு
திரைகடலோடிய வாரிசுகள் 
திரும்பிப் பார்க்குமுன்னே
நரையோடித் தளர்ந்ததொரு
தலைமுறை தனியாக .....

புலம்பெயர்தல் பொருளீட்டல்
உயிர் வாழத் தேவையது -நம்
புறம் தழைக்க வைத்திட்ட
வேர்களைத் தேடியே அவர்
வாடாமல் வணங்கியே
காத்திடுவோம்.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment