#மாற்றான் தோட்டத்தில் என் மல்லிகை
08.09.16
கண்ணுள்ளே மணியாய் அகம்
தழைக்க வந்த ஜோதியாய் எம்
நசையெனும் தீயிலு தித்திட்ட
நல்லமுதமாய்க் குறையில்லா நல்
அழகாய்க் குறைதீர்க்க வந்த எம்
அன்னையின் மாற்றுருவான மகளே....
உச்சி முகர்ந்து கர்வம் மேலோங்க
பிச்சிப்பூச் சூட்டிக் கலையரசி உன்னில்
கலையும் இயலும் இசையும் புகட்டிக்
காலத்தால் அழியாக் குணமுற் றென்றும்
குன்றா வளமாம் நிறைவான அன்பில்
குமுதமாய் மலர்ந்திட்ட செந்திருவே.....
அறிவும் நிறைவும் முதிர உயர்ந்து
ஆல் போல் தழைத்தல் இயற்கையெனக்
கண்டு ஓர் இசைந்த இதயம் தனைக்
கருத்திலுணர்ந்து காதல் கொண்டு எம்
வாழ்த்தது வேண்டி மனமகிழ்வோடு
வாரணம் சூழ வலம்வந்த கோதையே....
பாசமெனும் பதியனிட்டுப்
பாங்குறவே பந்தலிட்டு
நேசமென்ற நீரூற்றிக்
காத்த எம்
மல்லிகை மாற்றான் தோட்டத்தில்
மணத்ததுவே.....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment