Monday 19 September 2016

#தரையில் தொட்டணைக்கும் #பேசட்டும் உன் மௌனம் 07.09.16 #24

#தரையில் தொட்டணைக்கும்
#பேசட்டும் உன் மௌனம்
07.09.16

தரையில் தவழ்ந்து தொட்டணைக்கும் 
குளிர்த் திரையெனக் 
கவிந்தென் இமை மூடும்
வெண் புகையெனக்
கடக்கையில் சிலிர்ப்பூட்டும் 
மென் தடவலில்
உயிரின் வேர் தள்ளாடும்
மஞ்சு மட்டுமல்ல என்
அஞ்சுகமே நீயுமெனைத் தழுவையிலே...

காற்றினில் கலந்து மனம் வருடும்
கவியென இசைமழை
பொழிந்திருக்கும்
விரல் மீட்டலில்
சிணுங்கி ரீங்கரிக்கும்
மடிதனில் ஏந்தினால்
மயங்க வைக்கும் 
வீணை மட்டுமல்ல ஆயன் 
வேணுவையொத்த உன் மொழியும்தான்....

நாணத் திரையது மறைத்திருக்கும்
மோக நிலா மனதினில்
ஒளிந்திருக்கும்
விழிகளோ ஏகாந்தத்தில்
திளைத்திருக்கும்
வார்த்தைகள் பயனின்றி
பலம் இழக்கும்
கனவுகள் மட்டுமல்ல நம்
காதலும் கவிதைதான்..... 

தவழட்டும் மேகம் தரையில்
தாலாட்ட நீயென் அருகில்
கடக்கட்டும் கரையை அலைகள் 
தாண்டட்டும் அன்பின் எல்லைகள்
நிலவட்டும் மோனம்
பேசட்டும் உன் மௌனம்....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment