# வேரைத்தேடி
13.09.16
மண்ணுக்குள் ஒளிந்திருக்கும்
உயர்ந்த மரம் உயர்த்தி நிற்கும்
கண்ணுக்குப் புலப்படாமல்
தரைக்குள்ளே தாங்கி நிற்கும்...
சிறு புல்லெனவே இருந்ததுவை
இரு கை கொண்டு கட்டவொண்ணா
தல விருட்சமென ஆக்கிட்டுத்
தனை அடக்கிப் புதைந்திருக்கும்....
வளமதனை உறிந்தே தனக்கென்று
வைக்காமல் கிளை விடுத்த பூவாய்க்
காயாய்க் கனிந்து நல் விதையாய்
நலம் பெருக்கும் இயல்புற்றிருக்கும்.....
மரம் காக்கும் வேரைப்போல்
மனித இனம் காக்கும் மனிதருண்டு
தேடிப் பொருள் சேர்த்தே ஏழு
தலைமுறைக்கென்று வைக்காமல்...
சோம்பலும் சுயநலமுமாய்ச்
சந்ததியை ஆக்காமல்.....
தன்னலம் என்பது சமுதாயமதில்
பிறர் நலம் காணும் தன்மையதே
என்னும் நேயமது கொண்டிட்டார்
தமை உயர்த்தும் வழி கண்டிட்டார்
பிறர்க்கு ஈந்து பேருவகை
பெறும் வரம் பெற்றிட்டார்....
கொண்டாடி அவர் குணம் கொண்டே
தொண்டாற்றுவோம் ....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment