Monday 19 September 2016

# காவேரித்தாய் 16.09.16 #34

# காவேரித்தாய் 
16.09.16

உதித்தது குடகு மலையென்றாலும் அவள்
உகப்பொடு நடந்தது தமிழ்மண் கண்டு
தன்வழி தானே தீர்மானித்த அவளின்
தலை விதி மாற்றும் வகை கண்டோமோ?

தாய்வீடு கன்னட நாடென்றாலும்
தன்வீடாய் அவள் நினைத்தது தமிழகமன்றோ
தாயென அவளை அழைத்திட்டு நாமே
தடங்கல்கள் செய்திட்டால் நலம் பெறுவோமோ?

அன்னைக்குத் தன்பிள்ளை இரண்டில்
அன்பால் இடைவெளி உண்டோ
ஏற்றத்தாழ்வு பாரா தாய்மை அதில்
ஏனிந்த விவகாரம் முறையோ?

ஒரு தாயின் தண்ணீர் அருந்தி
உறவாலே சகோதரர் என்றானோம்
உணர்விழந்து உறவு கொன்றே அவள்
கண்ணீரைப் பெருக்குதல் சரியோ?

ஐந்தறிவு கொண்டு பகிர்ந்துண்ணும் காகம்
ஆறறிவு பெற்றும் பகிர்ந்தளிக்க மறுத்தோம்
சொந்தச் சகோதரனின் துன்பம் கண்டும்
சிந்தை இரங்கா மனம் பெற்றோமோ?

இன்றைய நிலையது நாளை மாறலாம் 
இன்னல்கள் தீரந்திடும் காலம் ஆகலாம்
சொல்லதும் செயலதும் மாறாது நின்றிடும்
பண்பாடு மறந்திட்டால் பகையென்றாகிடும்

எழுதிச் செல்லும் விதியின் கை
எங்கே எவ்விடம் சேர்க்கும் நம்மை
என்றேதான் அறிவாயோ தேடி
மனித இனமே நாடோடி

என் வீடு என் தெரு என் மொழி
என் இனம் என் நாடு என்கின்ற
எண்ணமது நமது நாம் நம்முடைய 
என்றாகி விட்டால் இன்பம் நமதே 

உரிமைக்கும் குரல் கொடுப்போம் 
உறவதனைப் பேணிடுவோம்
காவிரித் தாயவளைக் 
காத்திடுவோம் ஒற்றுமையாய் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment