Tuesday 6 September 2016

# ஆசிரியர் தின சிறப்புப் போட்டி 05.09.16 #22

# ஆசிரியர் தின சிறப்புப் போட்டி
05.09.16

அண்டமதில் ஞாயிறுதான் புற இருளை
ஆனந்த ஒளிகூட்டி அகற்றுதல் போல்
ஆவொன்று கன்றுக்கு ஊட்டுதல் போல்
அந்தகாரமது நீக்கிட்ட ஆசானாக..... 

கண் திறந்து காட்சிதனைப் பார்த்தாலும் 
காண்கின்ற திறனதுதான் வந்திடுமோ
ஊனென்ற பிறவி இதைப் பெற்றாலும்
ஊனமதை நீக்கும் கல்வி மருத்துவனாக.... 

அமுதமெனத் தன் குருதி ஈந்தவளும் 
ஆடிஓடிப் பொருள் தேடிக் காப்பவனும்
நம்பியெமை ஒப்படைக்கக் கல்லாமை எனும்
நதியைக் கடக்க வைத்த தோணியாக.....

ஏற்றமிகும் உயர்விடத்தில் கால் பதிக்க
ஏற்புடனே எம்மை ஏற்றிவிட்டு
எட்ட நின்று எம் மக்கள் இவரென்று
எல்லையிலா மகிழ்ச்சியுறும் ஏணியாக....

ஏற்றி விட்ட கைகள் கோடி அன்பு
ஏந்தி நின்ற முகங்கள் கோடி அவர்
என் தாய்க்கு ஈடாக்கி நன்றிகளை
என் கவிதைப் பூக்களால் சமர்ப்பிக்கிறேன்...

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment