Thursday 29 December 2016

#சதுரங்க வேட்டை. 04.10.16 #65

#சதுரங்க வேட்டை. 
04.10.16

மந்திரத்தால் மாங்காய் 
மண்ணில் விழுமென்றே
மாயையில் திரிந்தே
மதிகெட்டு நின்றார்

குறுக்கு வழியே
பொருள் தேடிச்சென்று
போகாத இடமும்
கூடாத நட்பும் 
கொண்டே அவர் 

புறவாசல் வழியே
திரு தேடிவருமென்று
திருடரை நாடியே
பலியாடாய் நின்றார் 

பேராசை தன்னில்
ஏமாளியென்றாகி
வாய்ச் சொற்கள் வீசும்
வலை தன்னில் விழுந்தே 

சதுரங்க ஆட்டமதில்
கணக்கெடுத்துப் பிறர் 
நகர்த்தப் பலியாகும்
காய்களோ இம்மூடர்கள் 

ஒட்டியது தெரியாமல் குருதி 
உறிந்திடும் அட்டையென
உணர்ந்திடுமுன் 
உறவாடிக் கெடுப்பார் 

அப்பாவி ஒருவரைக் கண்டால்
அமுக்கிடுவார் கோழியென
இனிமையாய்ப் பேசி 
இளித்த வாய் ஆக்கிடுவார்.  

புரட்டாலே பணம் சேர்த்துப்
பலகாலம் வாழ நினைக்கப்
பலிக்காது வால் பிடித்துப்
புலியைத் துரத்தும் கதை 

பொய்புரட்டு ஏமாற்றும்
பேராசை ஏமாறும்
உண்மையொன்றே உயர்த்திவிடும் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment