#மனக் கிடங்கு
03.10.16
பூட்டிக் கிடக்கும் மன
வீட்டுக் கிடங்கைத் திறக்கும்
வேகம் எப்போதேனும் வருவதுண்டு......
நினைவுகளின் அழுத்தத்தோடு
பின்னப்பட்ட வலைகளின்
நீடித்த நிழல்கள்
சுவற்றில் சித்திரங்களாய்
நேசித்து சுவாசித்து
கண்களில் சுமந்த கனவுகள்
மக்கிப் போன நெடியாய்
முகத்தில் மோதிப் பறந்த
வௌவாலாய்க் குன்ற
வைக்கும் சில கணங்கள் ........
குப்பை கூளம் வாரியெடுத்து
கதவு திறந்து காற்றும் ஒளியும்
வந்து நிறைத்த நிமிடம்
கண்ணில் விழுந்தது...
கண்வழி நுழைந்த கனவுகளின்
கன்னிமை குறையாத தொகுப்பு
உள் மனதின் ஆசைகள் -அதில்
உருவெடுத்த வார்த்தைகள்- என்
உணர்வுகளின் பொழிப்பு -உன்
விழி சேரா பதிப்பு
விரல்கள் வலித்திடும் நெருடுகையில்
அணையிட்ட நினைவுகளை
அசையிட்டுப் பார்க்கின்றேன்
வரிகளினூடே விரிந்த
வலிகளின் இன்பத்தை
பக்கங்களின்
மடித்த காதுகளை
நீவி விடுத்துப் படித்து
நீந்திடையில்
நிகழ்காலக் குரல்கள்
நிதர்சனத்திற்கிழுக்க
காது மடிக்கப்பட்டு
பாவமாய் எனைப் பார்த்து
பழைய இடத்தினிலே
பதுங்கும்..
பூட்டெடுத்துத் திரும்புகையில்
ஊர்ந்திருக்கும் அதன் கண்கள்
முதுகினில்...
மறுபடியும் திறக்கும் எண்ணம்
மனம் காணும் வரையிலும்
மறைந்திருக்கும் உயிர்
வாழ்ந்திருக்கும் என்
கனவான உன் நினைவில்.....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment