Saturday 18 March 2017

#தேர்வு #92

#தேர்வு

போகிற போக்கில்
பதில் சொல்ல முடியாத
பதிலொன்று இல்லாத
கேள்விகளை என் முன்
விளையாட்டாய் 
இறைத்துச் செல்கிறாய்
குழந்தையைப் போல! 
திணறி , அள்ளி,ஆராய்ந்து
சிந்தித்து, உணர்ந்து
வார்த்தைகளைத் தேடும் முன்
கடக்கிறாய் அனுபவம் தந்து
கடவுளைப் போல! 

வலிகள் நீ தந்தாலும்
தாண்டிடும் திறன் தந்தாய் ! 
துன்பம் சலித்துத் தக்க வைத்துப்
புறவுலகிற்காய்ப் புன்னகை 
சிந்தும் இதழ்கள் தந்தாய் ! 
சிரிப்பு சென்றடையாத என்
கண்களை  மறைக்க 
வேண்டிய அளவில் 
பாவனைகள் கற்பித்தாய்! 

வருத்தங்கள் உன் மேல் இருந்தாலும்
வாரி வழங்கும் வள்ளலல்லவா? 
இன்பமும் துன்பமும் 
சரியான விகிதத்தில்! 
ஒன்றின் பிடியில்
மற்றொன்றைத் தேட வைக்கும்
முயற்சியின் தூண்டுதலில் ! 
கோபம் சாத்தியமில்லை ! 
கொண்டாலும் செல்வதெங்கே? 

அணு அணுவாய் ரசிக்கிறேன்
அனு தினமும் நிந்தனை செய்து! 
இரண்டையும் ஒன்றாய்ப் பார்த்து
மந்தகாசப் பார்வையொன்றை ஈன்று
இன்றைக்கான கேள்விகளைத் தந்து
இமை தாழ்த்திக் கையிலெடுத்து
நிமிரும் முன் நகர்கிறாய்! 
திகைத்தாலும் தொடர்கிறேன்! 
முடிவில்லாத் தேர்வெழுதி உன்
மதிப்பீட்டிற்கான காத்திருப்பை! 

#ரத்னாவெங்கட்                        

No comments:

Post a Comment