#எங்கே நிம்மதி
30.12.16
கண்ணாமூச்சி விளையாட்டில்
கைதேர்ந்த ஒன்றின் கூட
கண்கட்டிக் காட்டில் விட்டுக்
கைநழுவி நகர்ந்தோடும் காலம்
காரிருளில் கைதடவி
கண்கட்டை அவிழ்த்தாலும்
கையதனில் சிக்காமல்
காற்றினிலே மறைந்து நின்று
கெக்கலிப்புக் காட்டிக் காட்டி
கடும் பித்தாய் அலைய வைக்கும்!
கண்ணருகில் கல்லை வைத்துக்
கல் அல்ல குன்றே என்று
கண்மூடிப் பிதற்றும் கூட்டம்
கடைசிவரை காண்பதில்லை
குறுக்கிடும் மலையொன்றைக்
கலங்காமல் நகர்த்திச் செல்லும்
கடின மனம் படைத்தோர்
கண்டாலும் நிற்பதில்லை!
தேடும் உள்ளங்கள்
தடுமாறி அலைகையிலே
தேடாத நெஞ்சமொன்றில் பதுங்கித்
தேவைகளின் இருப்பிடம்
தேடியலைந்து கச்சிதமாய் எதிர்
திசையொன்றில் குடியேறும் !
எங்கே எதிலே என்று
எந்நாளும் குழம்ப வைத்து
உள்ளேன் உனக்குள்ளேயென
உணர்த்திடும் பொழுதொன்றில்
உலகம் வசப்படும் நாளில்
உயிரொன்று உடல் நீங்கும்
நிம்மதியாய்!
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment