# புதிருக்குள் புதிரானவள்
05.12.16
பாரதிதாசன் போட்டியாளர்
எவரும் படித்திட இயலாத
புதினமொன்றைப்
படைத்திட்டுப் பாராட்டுக்களை
எதிர்பாராத பிரம்மன்
தன் படைப்புத் தொழிலின்
உச்சத்தைத் தொட்டதாய்
தனக்குத்தானே
தட்டிக் கொடுத்துக் கொண்டு
நடக்கப்போகும் காட்சியொன்றை
வேடிக்கை பார்க்க
வசதியான இருக்கை
பார்த்து அமர்ந்தான்
அறிவாளிகளெனப்
பிதற்றிக்கொண்டு திரிந்த
ஒரு வர்க்கம்
தன் ஆதாரத்தின் வேரெதென்று
அறியாமல் பலவிதமான
கோணத்தில் பார்வையிட்டுத்
தம் அறிவிற்கு எட்டிய வரையில்
புதுப்புது அர்த்தங்களைக்
கற்பித்தே பல பெயர்களில்
அழைத்துத் திரிந்தன
ஆயிரம் நூறாயிரமாய்க்
குவிந்த பொழிப்புரைகளில்
குருடர் உணர்ந்த யானையின்
பிரம்மாண்டம் சிறு சிறு
துண்டுகளாய்ச் சிதறிக் கிடந்தது
முடிவில் மூளைக்கு எட்டாத
முயற்சியொன்றைக் கைவிட்ட
சமுதாயம் சீச்சீ இந்தப்
பழம் புளித்ததெனத்
தன் இயலாமையை
மூடி வைத்து அறிவித்தது
புதிரான இதைப்
படித்து மதித்து
வழிநடப்போர்
மதி கெட்டு அழிவாரென!
படைத்தவன் தோல்வியை
ஒத்துக்கொண்டு
பைத்தியமாய் அலைவதாய்
சமீபத்திய தகவலொன்று
கிடைத்தது!
#ரத்னாவெங்கட்
No comments:
Post a Comment