மணித் துளிகளைத் தள்ளித்
தவமொன்று புரிவதாய்
என்னை நானே
ஏமாற்றிக் கொள்கிறேன்!
இடையில் கண் திறந்து
இல்லாத செய்தியொன்று
உன்னிடமிருந்து
வந்திருக்கக்கூடுமென்ற
எதிர்பார்ப்பில்
அலைபேசியைத்
திறப்பதும் மூடுவதுமான
கண்ணாமூச்சி
விளையாட்டொன்றில்....!
வெட்கம் கெட்ட மனம்
ஆறாத புண்ணொன்றின்
ரணத்தைத் துடைக்க நீ
வரக்கூடும் என்று
நம்பிக்கை இழக்காது
தெருவெங்கும் அலைந்து
தளராது யாசிக்கும்
பிச்சைக்காரனின் தொனியில்
இரவு முழுவதும்
புலம்பிக் கொண்டிருந்தது!
தேடியே வலியைத் தலையில்
ஏற்றிய இதயமொன்று
உறங்காத இமை தாழ்த்தி
குற்றத்தை ஒப்புக்கொண்டு
வால் சுருட்டி
அரைக்கண் மூடிக்
காலடியில் கிடந்தது!
உன் ஒரு செய்தியில்
மறுபடி துள்ளிப் பாயக்கூடுமென்ற
உண்மையின் தாக்கத்தை
உணர்த்தியதோர்
பரிதாப முனகலில்!
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment