#கானலைத் தேடி....
*******
வார்த்தை தவறிய சொல் ஒன்று
வாழ்ந்த வாழ்வினைக் கூண்டில் நிறுத்தும்
வண்ணம் சிதறிய ஓவியமொன்று
வரைந்த தூரிகைக் கனவினை முறிக்கும்!
கானலைத் தேடி அலையும் உள்ளம்
காலம் கடந்த முயற்சியில் பொங்கி
ஆசைத் தீயினை அணைத்திட வேண்டி
அழகிய நிஜத்தை மறந்திட நினைக்கும்!
தப்பிப் பிறந்த ஸ்வரத்தின் இனிமை
தவறுதலான ராகத்தில் அழியும்
தவறிய பாதைகள் விதிவழி அழைக்கும்
தப்புத் தாளம் இசையினைக் குலைக்கும்!
நடந்தது கையில் பிடிபடா வானம்
நடப்பது என்னுடன் என் நிழலாகும்
நிகழ்வுகள் இல்லா அமைதி ஒன்றே
நிம்மதி தந்து நாட்களை நகர்த்தும்!
இடவலமாக அலைந்திடும் மகிழ்ந்து
கிளைகள் தாவிக் கூத்தாடும் மனது
இறுக்கிப் பிடித்து ஒருமுகப்படுத்தக்
கிட்டிய வாழ்வின் அற்புதம் விளங்கும்!
#ரத்னாவெங்கட்
No comments:
Post a Comment