Saturday 18 March 2017

#காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின் பிரிவுகள் சருகுகள் புன்னகைப்பதில்லை #73

#காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின் பிரிவுகள்
சருகுகள் புன்னகைப்பதில்லை
12.01.17

காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் 
வாழ்வின் பிரிவுகள் அலைமோதிப்
பாய்ந்து ஓடிய நதியொன்றின்
கானல் வரிச் சுவடுகளாக
சாய்ந்த கதிரவனின் இரவல் ஒளியில்
வாழும் பிம்பங்கள் தம்
மாய்ந்த இளமையின் நிழலொன்றைப்
பாவனையாய்க் குடை பிடிக்கும்!  

துளிர் விடும் உறவுகள் நிலைக்குமென்று
தளிர் மனம் தழைத்தே உயர்ந்தோங்கும்
துளிர்த்துப் பூத்துக் காய்த்து நின்று
தரு அது கொடை என நிழல் தருமே
சுழற்சியில் பழையன கழிதலும்
துளிர்த்திடும் புதியன புகுதலும் 
இயற்கையில் நிகழும் நிகழ்வே! 

வரமாய்க் கிடைத்த காலத்தின் துளியொன்று
கரங்களில் தவழ்ந்த பொழுதொன்றின்
தரமது அறியாது தவற விட்டுப்
பாரமென மரக்கிளையில் ஊசலாடித்
தருணம் வந்ததென்று தரையிறங்கிச்
சுருண்டு காற்றில் அலைபாய்ந்து
மருண்டு மக்கி மண்ணாகும்
சருகுகள் புன்னகைப்பதில்லை! 

#ரத்னாவெங்கட்.

No comments:

Post a Comment