#ஓரங்க நாடகம்.
******
கோரிக்கையொன்றை வைத்தாய்
எள்ளி நகையாடினேன்!
வெள்ளி வரம்பிட்ட வயதைக் காட்டி!
இதயம் இன்னமும் இளமையாய்
உள்ளதென் நினைவால் என்றாய்!
மறுத்து வாதாடினேன்!
மனம் சித்து விளையாட்டு காட்டும்
வல்லமை படைத்ததென்று!
சரியென ஆமோதித்துச் சந்தேகத்தின்
விதைகளை என்னுள்
தூவிச் சென்றாய் அமைதியாய்!
வேர் விட்ட விதையின் வீரியம்
தந்த குடைச்சலில் திரும்ப வந்து
எப்படியெனக் கேட்டேன்?
வருத்தமாய் அமைதி காத்தாய்!
கேள்விகள் கேட்க வைத்து
ஓரிரு வார்த்தையில் ஒரு
ஓரங்க நாடகத்தை நடத்தி
ஒற்றைப் பார்வையாளராய்க்
கட்டி வைத்தாய் மயக்கத்தில்!
தெளிந்த நேரம் மேடையில் நானும்!
பார்வையாளனாய் நீயும்.....!
ஒற்றை வரியில் நீ செய்ததை
பத்தி பத்தியாய் வசனம் பேசியும்
செய்ய இயலாத பேரிடரில்
மேடைக்கப்பாலுள்ள நிஜத்தை
உணர மறுக்கும் இருள் வடிவாய்
ஒளி வெளிச்சத்தில் மூழ்குகிறேன் நான்....!
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment