Saturday 18 March 2017

# நல்லதோர் வீணை செய்தே பாரதிதாசன் சான்றிதழ் போட்டி. கவியுலகப் பூஞ்சோலை. #71

# நல்லதோர் வீணை செய்தே
பாரதிதாசன் சான்றிதழ் போட்டி.
கவியுலகப் பூஞ்சோலை.
***********
சுமந்து செல்லும் காற்றொன்று
நிசப்தத்தைக் கலைத்துச் செல்ல
உருவாகும் ஒலி அலைகள் எழுப்பும்
நிராசையின் எதிரொலிகள்!

இன்னிசையாய்ச் சில அதிர்வு
இமை வருடி இதயம் தொட
இயல்பற்ற ஓசையொன்றாய்ச் சில
இரு செவியும் கடந்து போகும் !

மீட்டிடுமோர் விரல் வழியே ராகங்களாய்
வீணையொன்றின் விதி பேசும்
மீஒலியாய் ஒளிந்திருக்கும் நாதமதைப்
பீடமொன்றில் ஏற்றி வைக்கும்!

லயம் தவறாப் பாங்கினிலே
லகு த்ருதக் கணக்கினிலே
ஸ்ருதியோடு ஒன்றி நிற்க
ஸ்வரம் ஸ்வரமாய் மழை பொழியும்!

குறைவில்லா அமிழ்தனைய இசையைக்
குடமதிலே சுழன்றலையும் மூச்சொன்றாய்க்
குறைவறக் கொண்டதோர் அரும் கருவியைக்
குறைகள் கண்டு புழுதியிலே எறிவதுண்டோ?

நலிந்திட ஒலி திடம் குறைந்திட-மன
வலி மிகுந்திடப் படும் துயர் துடையாது
பலி கொடுத்திடல் முறையோ?
எழு நடந்திடு தோள் கொடுத்திட
விழி துடைத்திடு விரல் மீட்டியே
பொழிந்திடு நல் இசையாய்!

#ரத்னாவெங்கட்.

வழி தவறும் இளைய சமுதாயம் புழுதியில் எறிந்திட்ட வீணைகள் போல
அவர்களைத் தூசு தட்டி மறுவாழ்வு கொடுக்க முடிந்தால் நலமென்ற ஒரு கருத்தைவைத்து முயற்சித்துள்ளேன்.
நன்றிகள்.

No comments:

Post a Comment