காலம் கடந்து வந்த
காற்றைப் போலானாலும்
ஸ்வாஸத்தில் நிறைந்து
பழகிய சில நாட்களில்
பிறந்ததில் இருந்து வந்த
பழக்கமொன்றாய்க் குருதி
நாளங்களுடன் கலந்து விட்டாய்!
பிரிப்பது சுலபமில்லை!
மாற்றும் முயற்சியில்
இதயத்தைக் கீறிக் கீறி
ரணமாக்கிக் கொள்கிறேன்!
மரண வலி மட்டும் மிச்சம் !
காயத்திற்கு மருந்தாகவும்
உன்னையே எதிர்பார்க்கிறேன்!
குழம்பி, தெளிந்து, குழப்புகிறேன் உன்னை!
நீட்டிய விரலொன்றை விடுவித்து
நீ போனால் உடைந்திடுவேன்!
தாங்கிடத் தோளொன்று
அருகிலிருந்தும்
உன் கைப்பிடியில் அடங்குதற்காய்
புரியாது அடம்பிடிக்கும்
குழந்தையான மனதை வாரியணைத்து
சமாதானம் செய்யும் முயற்சியில்
என்னை இழக்கிறேன் உன்னிடம்!
என்றோ மனதில் நுழைந்து
நினைவடுக்குகளில் பதிந்த
பாடலின் வரிகள்
அசந்தர்ப்பமான ஒரு கணத்தில்
வெளிவரத் துடிப்பதைப்
போன்றதானதாகத்தான்
உன்னுடனான என்
தொடர்பும் நிகழ்கிறது!
சூழலுக்கேற்றவாறு பாடல்
தன்னை சுகமாகவும் சோகமாகவும்
மாற்றிக்கொள்ள
குழப்பத்தின் வேகத்தில் நாட்கள்
நொடிகளாய் நகர்கிறது !
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment