Saturday 18 March 2017

#முத்திரைக் கவிதை-4 #மரணம் முடிவுரை அல்ல #74

#முத்திரைக் கவிதை-4
#மரணம் முடிவுரை அல்ல
************
நிரந்தரமில்லாதது வாழ்வு
பிறந்த கணமே 
நிச்சயிக்கப்பட்டது
இறப்பென்பது! 
வாழும் காலத்தில்
குறிக்கோளில்லாது வாழ்ந்து
மரணித்து மண்ணாவதில்
அர்த்தம் இல்லை! 
விதையொன்று புதைந்து
மரமாய்ப் பலவித உயிரினங்களுக்குப்
பயன்படுதல் போலே
வருங்காலச் சந்ததி வளம்பெற
நல்ல செயல்கள் செய்ய
இறந்த பின்னும் மற்றவர்
நினைவில் வாழுதல் 
சாத்தியமே! 
மரணம் முடிவுரை அல்ல
பிறர்க்கென வாழ்பவர்களுக்கு ! 
*************
ஒவ்வொரு விதையும்
ஒரு மரத்தின் வேர்களைத்
தன்னுள் அடக்கியே உருவெடுத்து
வீழ்ந்து புதைந்து மண்ணில்
விழுதூன்றிக் கிளைபரப்பி
புதைந்தாலும் வேரென்று
மரித்தாலும் மரமாக
வேறாக மாறியிங்கு
விண்ணுயரம் தான் அளக்கும்! 

ஊற்றுக்கண் திறந்து
காற்றடைத்த பையொன்றை
நிரந்தரமென நினைத்து
ஆரம்பித்ததோர்
நீண்ட பிரயாணத்தில்
நிர்ணயிக்கப்பட்டது இலக்கென்று
புரிபடாமல் பல்வேறு பாதைகளில்
பற்றுக் கோல்களின் உதவியுடன்
கடக்கும் தடங்களில்
சேகரிக்கும் மூட்டைகள்
சுமையென அறியாமல்
தோள்களில் சுமந்து
இறக்கிடும் வழியறியாத
கணமொன்றில்
பயணம் முடிவுற..... 

காலப் பெருவெளியில்
கைநழுவும் மணல் துகளில்
பெயர் பொறிப்பதை விடக்
கற்பக தருவாய் நல்
வரம் கொடுத்து 
நினைவொன்றில்
பசியமரமாய் உயிர்பெற
நிற்காது நகரும் 
நொடி முட்களாய்ப்
பிறந்து நகர்ந்து
இழந்திடுமோர் தருணங்கள்
உயிர்த்திடும் தொடர்ந்திடும்
புதிய கணக்கொன்றாய்! 

#ரத்னாவெங்கட். 

வேறாக- விதை விதையாகவே இருந்திட
                உபயோகமில்லை. 
                உருமாறி வேறொன்றாகி
                உபயோகமாக உயர்ந்து
                நிலைத்திடும் 
                உலகில் புகழுடைத்தே!

No comments:

Post a Comment