#கனவுக் குளம்.
கனவுக் குளமொன்றைக்
கல்லறையில் இட்டுப் புதைத்துக்
கல்லொன்றை ஊன்றி வைத்துக்
கவிதையொன்றைச் செதுக்கி வைத்தேன்!
துவங்கிய நாளெது நினைவிலில்லை
துடித்த இதயத்தினொலி மறக்கவில்லை!
புதைத்திட்ட நாளின் நினைவொன்றில்
புத்தம்புதிய பதியனொன்றை நட்டு வைத்தேன்!
நித்தம் பிழிந்தெடுக்கும் கடமைகளைச்
சித்தம் குவித்து நிதம் ஆற்றிப் புறந்தள்ளி
மொத்தம் முடித்ததாய் மயங்கிய மாலையிலே
ஒத்தி வைத்த விஜயத்தைச் செய்து வைத்தேன்!
பதியனொன்று பூக்காடாகி விரிந்து நிற்க
பிளந்திட்ட பூமி வழி குளம் அங்கு
பளபளத்த வெண்ணிலவின் நிழல் தன்னைப்
பிரதிபலித்து வாவென அழைக்க நின்றேன்!
மூடி வைத்துத் தேங்கியதோர் தண்ணீரில்
முடை நாற்றமடிக்குமென நினைக்க மாறாய்
நீந்திடும் மீன்களும் அல்லிப் பூக்களும்
நினைவின் நிழல் தன்னில் செழிக்கக் கண்டேன்!
வட்டச் சுழலில் சிக்கிச் சுழன்றிடுமோர்
இச்சைத் துகளின் பிடியில் மறுபடி
கட்டுப்பட்டுத் துள்ளும் மனதினைச்
சஞ்சலமின்றிக் கனவுடன் சேர்த்தேன்!
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment