காற்றில் ஏறி விண்ணைச் சாடு
மண்ணைத் துளைத்து பாதாளம் புகு
மேலும் கீழும் புரட்டிப் போடு
இடது வலது எதையும் விடாதே.....
ஓடு.....ஓடு முதலாமிடம் தொடு
விடு.... விடு விட்டுக்கொடு
பந்தம் அழைத்தால் பந்தயம் விடு.....
கோட்டினிலிருந்து விலகாதே ....
அச்சிலிருந்து நழுவாதே.....
நிமிர்ந்து நட நேர்ப்படப் பார்
அச்சமும் நாணமும் மறந்து விடாதே
அநியாயம் கண்டால் எரிக்கக் கற்றுக்கொள்
அன்பென்று வந்தால் தண்ணிலவாய்க் குளிர்
அடுக்களையில் பசியமர்த்தும் செந்தழலாயிரு
அகத்தை ஒளிர்விக்கும் குத்துவிளக்காயும் இரு
அஞ்ஞானம் ....... பட்டியல் தொடருமுன்
அம்மாவென அழைத்தது மகளின் குரல்
குறும்பும் குதூகலமும் கூத்தாடிய முகத்தில்
குழப்பம் வந்து குடியேற......
தாளவில்லை தாயுள்ளம்....
அருகழைத்து அழகு முகத்தில்
முத்தமொன்று வைத்துரைத்தேன்
என் மகளே
வாழ்க்கையை வாழ்ந்து பாரென்று....
No comments:
Post a Comment