# பருவம்
23.08.16
அமுத மதைப் பருகிக்கண் கிறங்கி
அன்னை யவள் மடியாம் அரியணையில்
அரிதுயில் கொண்ட தொரு காலம்
அது வானவில்லின் வாழ்வையொத்த நேரம்.....
தளர் நடையும் யாழிசை மொழியும்
கொண் டாடித் திரிந்திருக்கும் பேதை
தலைவாரிப் பூச்சூட்டி அழியாவரம் தேடிப்
பண்பாடிச் சென்றவிடம் கல்விச் சாலை.....
அரும்பொன்று மலராகப் பெதும்பை யவள்
மங்கையென மாற்றத்தில் மின்னுகிற உருவம்
அவள் மனமெங்கும் குழப்பங்கள் கேள்விகள்
மின்னலிடத் தேவையது வழுக்குப் பாறை
தனில் நடை பயிலும் கவனம்.....
அகமடக்கும் வித்தையது கற்றிட்டால்
தெளிந்த ஞானமது பெற்றிட்டால்
மடந்தையவள் மன முதிர்ச்சி கூடித்தான்
அறிவாய் உயர்ந்தநல் அரிவையானாள்...
தன்னிலோர் பாதியைய்த் தேடிக் கைப்பிடித்துத்
தானங்கள் தர்மங்கள் கடைப்பிடித்து
பிற்காலம் உயரநற் சந்ததி தந்து
பேர் கொண்டிளம் பெண்ணாக வாழ்த்து....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment